திருவாரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மணல் மூட்டைகள், ஜெனரேட்டர்கள், சவுக்கு மரங்கள், மண்வெட்டிகள் போன்ற அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதையும், கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள எண்கண் இயக்கு அணையில் வெட்டாறு, ஓடம்போக்கியாறு, வாளவாய்க்கால் ஆகியவற்றின் நீரின் அளவு மற்றும் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள், காலி சாக்குகள், மணல் மற்றும் சவுக்கு கம்புகள் ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையருமான த.ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பல்லவி வர்மா ஆகியோர் உடனிருந்தனர்.
கூத்தாநல்லூர் ஒன்றியம், சித்தாம்பூர் ஊராட்சி பகுதியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரி மூலம் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பதைப் பார்வையிட்டு, மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட ராமபுரம் ஊராட்சியில் நடைபெற்றுவரும் பயிர் கணக்கெடுக்கும் பணியையும் அவர் பாரீவையிட்டார்.
மன்னார்குடி ஒன்றியம், மேலநெம்மேலி-ஐ மற்றும் மேலநெம்மேலி-ஐஐ ஆகிய நேரடி நெல் கொள்முதல்நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரி மூலம் ஏற்றுமதி செய்யப்படுவதையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு, மழைக்கு முன்னதாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக அனுப்பி வைக்க கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர்கள் சத்யா (திருவாரூர்) யோகேஸ்வரன் (மன்னார்குடி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயசீலன், உதவிக் கோட்டப்பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் (ம) பராமரிப்பு) மாரிமுத்து, உதவி செயற்பொறியாளர் (வெண்ணாறு) மாணிக்கவேல், உதவி பொறியாளர் கோவிந்தராஜன், வட்டாட்சியர்கள் ஸ்டாலின் (திருவாரூர்), வசுமதி (கூத்தாநல்லூர்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.



