திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கழிக்குளம்கிராமத்தைசேர்ந்தவர் சக்திவேல். இவருடையமனைவி அம்சா(வயது 29). இவர் கடந்த 15-ம் தேதி காலை 11 மணிக்கு தனதுகுழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி திருவண்ணாமலைக்கு பேருந்து மூலம் வந்துள்ளார்.
அப்போது பெரியார் சிலையில் இறங்கிய அம்சா அரசு மருத்துவமனைக்கு செல்வதற் காக அவலூர்பேட்டை சாலையில் உள்ள ரயில்வே கேட் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது கீழ்பென்னாத்தூர் கொல்லைக்கொட்டாய் பகுதியை சேர்ந்த திருப்பதி (25), கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நேத்ரா ஆகிய இருவரும் ஆட்டோவில் சென்றுள்ளனர். நேத்திராவுக்கு அம்சா தெரிந்தவர் என்பதால் ஆட்டோவில் மருத்துவமனைக்கு செல்லலாம் எனக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால் அவர்கள் மருத்துவமனைக்குச் செல்லாமல் வேங்கிக்கால் பகுதியில் திருப்பதி வசித்து வந்த வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு. அம்சா அணிந்திருந்த 4 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு கழுத்தை நெரித்து இருவரும் சேர்ந்து அம்சாவை கொலை செய்துள்ளனர்.
பின்னர் சடலத்தை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி பள்ளிகொண்டாபட்டு கிராமம் அருகே உள்ள கரும்புத் தோப்பில் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அப்போது அம்சாவின் இரண்டரை வயது குழந்தையை திண்டிவனம் எஸ்.கே. பி. கல்லூரி அருகே சாலை ஓரமாக விட்டு விட்டுச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து சாலையில் திரிந்த குழந்தையை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் அதை மீட்டு வைத்துள்ளனர். குழந்தை சாலை ஓரமாக அழுது கொண்டிருந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து கீழ்பெண்ணாத்தூர் போலீசார் குழந்தையை மீட்டு குழந்தையின் தந்தை சக்திவேலிடம் ஒப்படைத்தனர்.
காணாமல் போன குழந்தை கிடைத்த நிலையில் தாய் அம்சாவை காணவில்லை என சக்திவேல் கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் அம்சாவை தீவிரமாகத் தேடினர். கிட்டத்தட்ட 20 நாளாகத் தேடி வந்த நிலையில் கடந்த அக்டோபர் 15 -ம் தேதி மாலை 6 மணிக்கு குழந்தையை கொண்டு வந்து விட்டது யார் என சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை தொடங்கினர்.
அப்போது குழந்தையை அழைத்துக் கொண்டு வந்து விட்ட இருசக்கர வாகனத்தை அம்சாவின் கணவர் பார்த்தபொழுது. “இந்த வண்டி கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நேத்ரா உடையது” என அடையாளம் காட்டினார்.
அதன் அடிப்படையில் நேத்ராவை போலீசார் பிடித்து நடத்திய விசாரணையில் மேற்குறிப்பிட்ட தகவல்கள் அம்பலமாயின. அவர் அளித்த தகவலின்பேரில், கரும்புத் தோட்டத்தில் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டிருந்த அம்சாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
நான்கு சவரன் நகைக்காக பெண்ணை கடத்திக் கொலை செய்து அவரது குழந்தையை நெடுஞ்சாலை ஓரம் தவிக்க விட்டுச் சென்ற இந்த கொடூர சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



