திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்காததைக் கண்டித்து, விவசாயிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் வராததால் கூட்டம் நடத்த முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் விவசாயத்தை மட்டுமே பிரதானமாக நம்பியுள்ள ஒரு பகுதியாகும். இதனால் விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண்பதற்காக, மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையிலும், கோட்ட அளவில் ஆர்.டி.ஓ தலைமையிலும் மாதந்தோறும் குறைதீர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சமீபகாலமாக தாலுகா அளவிலான குறைதீர்வு கூட்டங்கள் நடைபெறாததால், விவசாயிகள் அனைவரும் கோட்ட அளவிலான கூட்டங்களையே பெரிதும் நம்பியுள்ளனர். இதனால் இக்கூட்டங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.
இந்நிலையில், திருவண்ணாமலை காமராஜர் சிலை சந்திப்பு அருகே அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரங்கத்தில், திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆர்.டி.ஓ செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசபாக்கம் ஆகிய நான்கு தாலுகாக்களைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் பெருமளவில் பங்கேற்றனர்.
ஆனால், இக்கூட்டத்தில் பெரும்பாலான துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. துறை அதிகாரிகள் வந்தால்தான் அந்தந்தப் பகுதிப் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காண முடியும் என்பதால், அதிகாரிகள் வரும் வரை கூட்டத்தை நடத்தக் கூடாது என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும், குறைந்த எண்ணிக்கையிலான அதிகாரிகளை வைத்து கூட்டத்தை நடத்த அதிகாரிகள் முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கண்டன முழக்கங்களை எழுப்பியதோடு, கூட்ட அரங்கிலேயே தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
கூட்டம் ரத்து
விவசாயிகளின் இந்தத் தர்ணா போராட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. தங்களது கோரிக்கைகளைத் தெரிவிக்க மறுத்து விவசாயிகள் தொடர்ந்து போராடினர். இதையடுத்து அதிகாரிகள் நடத்திய சமரச முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
இறுதியாக, கூட்டத்திற்கு வந்திருந்த அதிகாரிகளிடம் மட்டும் கையெழுத்து பெற்றுக்கொண்டு, கூட்டம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றமும், பரபரப்பும் தொற்றிக்கொண்டது.
முன்னறிவிப்பின்றி மின் நிறுத்தம் – மக்கள் அவதி
ஆரணி வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு) அன்பழகன் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில், கடந்த சில வாரங்களாக ஆரணி அடுத்துள்ள குண்ணத்தூர், வெள்ளேரி, வெட்டியாந்தொழுவம் ஆகிய கிராமங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் தினமும் இரவு மற்றும் பகல் நேரங்களில் 10 முதல் 15 முறை முன்னறிவிப்பின்றி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மும்முனை மின்சாரமும் முறையாக வழங்கப்படாததால் நெற்பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தடையற்ற மின்சாரம் வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.



