மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையில் புதிய தீவிர சிகிச்சை கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்து இருப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்து மருத்தவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து, அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:-
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமணையை பொறுத்த வரை தினந்தோறும் 3000 முதல் 4000 வரை புற மருத்துவ பயனாளர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. உள் மருத்துவ பயனாளிகள் 1500 முதல் 1800 வரை பயன்பெற்று வருகிறார்கள். ஒரு மாதத்திற்கு சுமார் 1500 முதல் 1800 பிரசவங்கள் நடைபெறுகின்றன. சுகப்பிரசவங்களின்
எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் சுகப்பிரசவத்தை ஊக்குவிக்கும் வகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி ரூபாய் 23 கோடியே 75 இலட்சம் மதிப்பீட்டில் 50 படுக்கைகள், +அறுவைசிகிச்சை அரங்குகள், அதிநவீன வசதிகளுடன் சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. 8 கோடி மதிப்பீட்டிலான இருதய சிகிச்சை அளிக்கும் கேத் லேப் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன. திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 189 மருத்துவர்களும் 229 பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மோகன் காந்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மாலதி, செய்யாறு மாவட்ட மருத்துவர் சதீஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள் உடனிருந்தனர்.



