செய்யாறு கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட நெடும்பிறை,பல்லி,பெருங்கட்டூர், அழிவிடைதாங்கி உள்ளிட்ட ஐந்து பள்ளிகளில், +1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
அந்தந்த பகுதிகளின் தி.மு.க., ஒன்றிய செயலாளர்களான ஜே.சி. கே.சீனுவாசன், ஞானவேல் ஆகியோர் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்களான சங்கர், சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார். அவர் பேசுகையில், “தமிழக அரசு கல்விக்காக நிறைய செலவு செய்து வருகிறது.
இந்த செலவு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றால் மாணவர்களாகிய நீங்கள் நன்கு படித்து, உங்களது வீட்டிற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும். படிப்புடன் ஒழுக்கத்தையும் பள்ளி பருவத்திலேயே கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான், நீங்கள் பக்குவம் அடைந்தவராக திகழ்வீர்கள்.
‘முன்பெல்லாம் அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் என்று கூறப்பட்டது.அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது ‘அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம் என்று திகழ்ந்து வருகின்றன” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க.. பொறுப்பாளர்களான மணிவண்ணன், ராம் ரவி, சிவபிரகாசம் பெருமாள், எஸ்.எஸ்.குமார், உடற்கல்வி ஆசிரியர்களான அருள், மணிகண்டன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



