குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று காலை தேசியக்கொடிஏற்றினார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாட்டின் 77வது குடியரசு தினவிழா நேற்று (ஜனவரி 26) கோலாகலமாக நடந்தது. ஜனாதிபதி மாளிகையில் இருந்து திரவுபதி முர்மு பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டார். அவரை பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் டெல்லியில் உள்ள கடமை பாதையில் திரவுபதி முர்மு மூவர்ண கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
குடியரசு தினவிழாவில் பங்கேற்க வந்த துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை கை குலுக்கி பிரதமர் மோடி வரவேற்றார். சில வினாடிகள் இருவரும் தங்களது அன்பை பரிமாறி கொண்டனர்.
குடியரசு தினத்தையொட்டி புதுடெல்லி முழுதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
நாட்டின் உயரிய வீரதீர விருதுகளில் ஒன்றான அசோக சக்ரா விருதை விண்வெளி நாயகன் சுபான்ஷூ சுக்லாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். நாட்டின் ராணுவ பலம், கலாசாரம் ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு நடத்தப்பட்டது. பல்வேறு துறை சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார அணிவகுப்பு ஊர்திகள் இடம் பெற்றிருந்தன. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் முக்கிய பங்கு வகித்த ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகள் அணிவகுப்பு பிரமாண்டமாக நடந்தது.
குடியரசு நாள் அணிவகுப்பில் ‘வளமையின் மந்திரம்: சுயசார்பு இந்தியா’ எனும் கருப்பொருளில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி இடம்பெற்றது. தமிழக ஊர்தியின் இருபுறமும், மயில் நடனம் மயிலாட்டம் ஆடும் பாரம்பரிய பரதநாட்டிய கலைஞர்கள் மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் சுற்றும் வீரமங்கையர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
தமிழ்நாடு, மின் வாகன (இவி) உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவெடுத்திருக்கிறது. இதை குறிக்கும் விதமாக அலங்கார ஊாதியின் முன்பகுதியில் தமிழ்நாட்டின் கலாசார வலிமை, மாறாத உணர்வையும் குறிக்கும் வகையில், டெக்னோ – ஜல்லிக்கட்டு சித்தரிக்கப்பட்டிருந்தது. காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரா
துணிச்சல், திறமை, மற்றும் பாரம்பரியத்தை குறிக்கிறார். ஒளிரும் சுற்று வடிவங்களுடன் காட்டப்பட்டுள்ள காளை உருவம், பாரம்பரியத்தையும் தொழில்நுட்பத்தையும் இணைப்பதைக் காட்டுகிறது.
அலங்கார வாகனத்தின் நடுப்பகுதியில், மாசற்ற போக்குவரத்துக்கான மேம்பட்ட மின் வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தியை காட்டும் வகையில் காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. ரோபோடிக் கரங்கள் பேட்டரி அலகுகளை இணைப்பதைக் காட்டுவது துல்லியமான தொழில்துறை நிபுணத்துவத்தை எடுத்துரைக்கிறது. வாகனத்தில் இடம்பெற்றுள்ள இவி மின்தொடர்பு நிலையம், சுற்றுச்சூழலுக்கு இணக்கமான போக்குவரத்தை தமிழ்நாட்டின் உறுதிப்பாட்டுக்கு வலியுறுத்துகிறது.
அணிவகுப்பு குழுவில், கன்னியாகுமரியிலிருந்தும் மாநிலத்தின் பிற இடங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைமிக்க இளம் பெண்கள் 17 பேர் இடம்பெற்றிருந்தனர். முன்னதாக டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தியாகிகள் நினைவிடத்தில் பிரதமர் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் வரவேற்பு அளித்தனர்



