செய்யாறு அடுத்த அருகாவூர் கிராமத்தில் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் நேற்றுநடந்தது. வட்டார மருத்துவர் ஷர்மிளா அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடாஜலபதி முன்னிலை வகித்தார். செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, முகாமைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
ஒவ்வொரு கிராமப்புறத்திலும் நடத்தப்பட்டு வரும் ‘நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் சடங்கிற்காக நடத்தப்படவில்லை. கடைக்கோடியில் இருப்பவர்களும் உயர் சிகிச்சைகளை பெறவேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் இதுபோன்ற முகாம்கள் நீங்கும் இருக்கும் ஊரிலேயே நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களை நீங்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நோய் முற்றிய பிறகுதான் மருத்துவரை நாட வேண்டும் என்ற சூழ்நிலையை முழுமையாக மாற்றிக் கொள்ளவேண்டும். குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்பதற்காகத் தான் தமிழக அரசு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பத்து மாதத்திற்குள் மூன்று அல்லது இரண்டு தவணைகளாக 18 ஆயிரம் ரூபாயை வழங்கி வருகிறது. இந்த பணத்தை வைத்து கர்ப்பிணித் தாய்மார்கள் சத்தான பொருட்களை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு ஜோதி எம்.எல்.ஏ. பேசினார்.
இந்நிகழ்ச்சியில் செய்யாறு தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், விருச்சம் பள்ளி தாளாளர் முத்துக்குமார். திமுக பொறுப்பாளர்களான ராம் ரவி, மகாராஜன், வெங்கடேசன், அருள், சக்திவேல், சூரிய பிரகாஷ் மகாராஜன். உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மருத்துவர் லதா நன்றி கூறினார்.



