2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய், இன்று தஞ்சாவூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். டெல்டா மண்ணில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்ததோடு, விவசாயிகளுக்கான முக்கிய வாக்குறுதிகளையும் அறிவித்தார்.
“டெல்லிக்கு வெள்ளைக் கொடி பிடிப்பது யார்?” – திமுக மீது நேரடித் தாக்குதல்
மேடையில் பேசிய விஜய், திமுகவின் இரட்டை வேடத்தை விமர்சிக்கும் வகையில் பேசுகையில்:
“சென்னையில் அமர்ந்து கொண்டு டெல்லி, டெல்லி எனப் பேசுவதும், அடித்தக் கொள்ளைக்கு ரெய்டு வந்துவிட்டால் அதே டெல்லிக்கு வெள்ளைக் கொடி பிடிப்பதும் யார் என்பது ஊருக்கே தெரியும். தமிழ்நாட்டைக் காப்பது ஸ்டாலின்தான் எனப் பேசுவது இனி வேலைக்கு ஆகாது. இப்போது சிறுவர்கள் கூட ‘திமுக ஒரு தீய சக்தி’ எனச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்,” எனச் சாடினார்.
தொடர்ந்து கிரிக்கெட் உதாரணத்தைக் கையாண்ட அவர், “கிரிக்கெட்டில் தமிழ்நாட்டு அணியை டெல்லி அணியால் தொட முடியாது. அங்கு விசிலை போடுவது சிஎஸ்கே; வரக்கூடிய தேர்தலில் விசிலை போடப்போவது தவெக. டெல்லி அணி மட்டுமல்ல, எந்த அணியாக இருந்தாலும் தவெக அடித்து நொறுக்கும்,” என அதிரடியாகத் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கான ‘மெகா’ வாக்குறுதிகள்
விவசாயிகளின் நலன் சார்ந்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிட்டார். குறிப்பாக, கல்வி மற்றும் கடன் தள்ளுபடி குறித்து அவர் பேசியவை:
கல்விச் செலவு: 2 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்போர் மற்றும் நிலமற்ற விவசாயக் குடும்பங்களில், அரசு ஊழியர்கள் இல்லாத பட்சத்தில், அவர்கள் பிள்ளைகளின் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உயர்கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும்.
கடன் தள்ளுபடி: 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களின் கடனை 50% ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
ரேசன் கடைகள்: தவெக ஆட்சி அமைந்தால் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு ரேசன் கடை உருவாக்கப்படும். அரிசி தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் பாக்கெட் செய்யப்பட்டு வழங்கப்படும்.
“அடுத்த ஜென்மம் இருந்தால் விவசாயியாகப் பிறப்பேன்”
விவசாயிகள் மீதான தனது மதிப்பை வெளிப்படுத்திய விஜய், “எனக்கு அடுத்த ஜென்மத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் அப்படி ஒன்று இருந்தால், நான் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறக்கவே விரும்புகிறேன். மற்றவர்களைப் போல ‘நானும் ஒரு டெல்டாகாரன்’ என உங்கள் காதில் டால்டா ஊற்ற நான் வரவில்லை. எனக்கு விவசாயம் பற்றித் தெரியாது, ஆனால் விவசாயிகளின் கஷ்டம் நன்றாகத் தெரியும்,” என உருக்கமாகப் பேசினார்.
இந்த உறவு வெறும் தேர்தல் உறவு அல்ல, இது ‘எமோஷன்’ (Emotion) கலந்த குடும்ப உறவு என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். தஞ்சையில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் உற்சாக முழக்கங்களால் டெல்டா மாவட்டமே அதிர்கிறது.



