“அதிக மக்களை ஒருங்கிணைத்து, தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை மாற்றக்கூடிய ஒரு புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்குவதே எனது மிகப்பெரிய ஆசை” என்று பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பாஜகவிலிருந்து விலகுவதாக அண்ணாமலை அளித்த ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தலைமை இன்று ஏற்றுக்கொண்டதாக அறிவித்த நிலையில், சமூக ஊடகங்கள் வாயிலாகத் தனது எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார்.
“18 மாதங்களுக்கு முன்பே எடுத்த முடிவு”
தனது விலகல் குறித்துப் பேசிய அண்ணாமலை, “கடந்த 2020 ஆகஸ்ட் 25 அன்று நான் பாஜகவில் இணைந்தேன். தமிழக மக்களுக்காகப் பணியாற்றக் கிடைத்த 6 ஆண்டு கால வாய்ப்பைப் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால், கட்சியில் எனக்குச் சில சிறிய பிரச்சினைகள் இருந்துகொண்டே இருந்தன. இதுகுறித்து கடந்த 18 மாதங்களாகத் தலைமையிடம் பேசி வந்தேன். கடந்த டிசம்பர் 4-ஆம் தேதியே எனது விலகல் முடிவைத் தெரிவித்துவிட்டேன். எனினும், தேர்தல் பணிகளை முடித்துவிட்டுச் செல்லுமாறு தலைமை கேட்டுக்கொண்டதால், மே மாதம் இறுதி வரை எனது கடமைகளைச் செதுக்கிவிட்டு, தற்போது பண்போடு வெளியே வந்துள்ளேன்” என்றார்.
ரஜினிகாந்த் அழைப்பும், பாஜக வாக்குறுதியும்
கடந்த கால நிகழ்வு ஒன்றை நினைவுகூர்ந்த அவர், “காவல்துறைப் பதவியிலிருந்து நான் விலகிய பிறகு, நடிகர் ரஜினிகாந்துடன் நட்பு ஏற்பட்டது. நான் பாஜகவில் இணைவதற்கு முதல் நாள் அவர் என்னிடம் பேசி, தனது இயக்கத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், அப்போது கோவிட் பெருந்தொற்று காலமாக இருந்ததால் அவர் அரசியலுக்கு வராமல் இருப்பது அவருக்கு நல்லது என்று கருதினேன். மேலும், பாஜகவில் இணைவதாக பி.எல். சந்தோஷ் அவர்களிடம் வாக்குறுதி அளித்திருந்ததால், ரஜினியிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு பாஜகவில் இணைந்தேன்” என்று யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
புதிய கட்சியின் இலக்குகள் மற்றும் கொள்கைகள்:
புதிதாகத் தொடங்கப்படவுள்ள இயக்கம் குறித்து அண்ணாமலை வெளியிட்ட முக்கிய அம்சங்கள்:
தேர்தல் களம்: இந்த இயக்கம் தற்போதைக்குத் தன்னார்வலர்களைத் தயார்படுத்தும் இயக்கமாகச் செயல்படும். அடுத்ததாகத் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இக்கட்சி நிச்சயமாகப் போட்டியிடும்.
பதவிக் கால வரம்பு: தனிநபர் துதிபாடும் அரசியல் இன்றி, தூய்மையான நிர்வாகத்தை வழங்குவதே நோக்கம். கட்சியில் நிரந்தர எம்.எல்.ஏ, நிரந்தர எம்.பி என்ற நிலையை உடைத்து, அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் வகையில் பதவிக்காலம் நிர்ணயம் செய்யப்படும். இது எனக்கும் பொருந்தும்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவேற்பு: உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர்பதவிகளில் இருக்கும் தமிழர்களைத் தமிழக வளர்ச்சிக்கு உழைக்க இங்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும்.
‘மாறுவோம்; மாற்றுவோம்’
மண் சார்ந்த, எல்லோரையும் உள்ளடக்கிய அரசியலை முன்னெடுக்க விரும்புவதாகத் தெரிவித்த அண்ணாமலை, இதற்காக கோவையில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரில் ‘Centre for Ethics and Politics’ என்ற பயிற்சி மையம் உருவாக்கப்படும் என்றும், புதிய இயக்கத்தில் இணைய www.wetheleader.org என்ற இணையதளம் செயல்படும் என்றும் அறிவித்தார்.
“திமுக, அதிமுக, தவெக, பாமக, நாம் தமிழர், தேமுதிக போன்ற கட்சிகளை எப்படிப் பார்ப்பேனோ, இனி பாஜகவையும் அப்படித்தான் பார்ப்பேன். யாருக்கும் நாம் போட்டியோ, எதிரியோ கிடையாது. தரத்தின் அடிப்படையில் மக்கள் எங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். நமது தாரக மந்திரம் ‘மாறுவோம்; மாற்றுவோம்’” என்று கூறி அண்ணாமலை தனது உரையை நிறைவு செய்தார்.



