நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (எல்.பி.ஜி) சிலிண்டரின் விலை ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுசெய்யும் விதமாக, கடந்த 3 மாதங்களில் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
சர்வதேச நெருக்கடியும் விலை உயர்வும்
மேற்காசியப் போர் மற்றும் ஈரான் பதற்றம் காரணமாக உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த சர்வதேச விலை மாற்றம் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
முக்கிய நகரங்களில் புதிய விலை நிலவரம்
நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விலை உயர்வால், நாட்டின் முக்கிய நகரங்களில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டரின் புதிய விலை விவரம் பின்வருமாறு:
| மாநகரம் | பழைய விலை (ரூ.) | புதிய விலை (ரூ.) |
| சென்னை | 928.50 | 957.50 |
| டெல்லி | 913.00 | 942.00 |
| மும்பை | 912.50 | 941.40 |
| கொல்கத்தா | 939.00 | 968.00 |
முன்னதாக, எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஓரளவு ஈடுசெய்வதற்காக கடந்த மார்ச் 7-ஆம் தேதி சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது 3 மாதங்களில் இரண்டாவது முறையாக ரூ.29 அதிகரிக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக ரூ.89 வரை விலை உயர்ந்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் மற்றும் மத்திய அரசு இழப்பீடு
இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
“தற்போது ஒரு சமையல் காஸ் சிலிண்டரை விநியோகம் செய்வதற்கான செலவு சுமார் ரூ.1,600 முதல் ரூ.1,700 வரை அதிகரித்துள்ளது. இதனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு சிலிண்டருக்கு சுமார் ரூ.700 வரை இழப்பைச் சந்திக்கின்றன. கடந்த முழு நிதியாண்டில் வீட்டு உபயோக எல்.பி.ஜி விநியோகத்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு சுமார் ரூ.60,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டின் நஷ்டமான ரூ.41,338 கோடியை விட அதிகம். இந்த நஷ்டத்திற்கு இழப்பீடாக மத்திய அமைச்சரவை ரூ.30,000 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.”
உலக நாடுகளுடன் ஒப்பீடு
சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி விலை பல மடங்கு உயர்ந்துள்ள போதிலும், அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை விட இந்தியாவில் சமையல் காஸ் குறைந்த விலைக்கே விற்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா: ரூ.942
பாகிஸ்தான்: ரூ.1,046
வங்கதேசம்: ரூ.1,225
அமெரிக்கா: ரூ.1,755
ஆஸ்திரேலியா: ரூ.1,765
கனடா: ரூ.2,411
உஜ்வாலா திட்ட மானியம் என்னாகும்?
பிரதம மந்திரியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் வரை தலா ரூ.300 மானியமாக மத்திய அரசு வழங்கி வருகிறது. இதனால் இத்திட்ட பயனாளிகள் ஒரு சிலிண்டருக்கு ரூ.642 மட்டுமே செலுத்தி வருகின்றனர்.
நடப்பு நிதியாண்டில் இந்த மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9-லிருந்து 4 ஆகக் குறைக்க அரசு திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து பெட்ரோலிய அமைச்சகத்திடம் இருந்து இதுவரை முறையான விளக்கம் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



