இந்திய சார்ட்டட் அக்கவுண்டண்ட்ஸ் நிறுவனம் (ICAI) ஜனவரி 2026-ஆம் ஆண்டுக்கான சிஏ பவுண்டேஷன் (CA Foundation) தேர்வு முடிவுகளை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
மதுரை மாணவியின் இமாலய சாதனை
வெளியாகியுள்ள தேர்வு முடிவுகளின்படி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லோகப்பிரியா பி.பி, 400 மதிப்பெண்களுக்கு 366 மதிப்பெண்கள் (91.50%) பெற்று, தேசிய அளவில் முதலிடத்தைப் (All India Rank 1) பிடித்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து மிட்னாபூரைச் சேர்ந்த குஷி சிகாரியா 365 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், கண்ணூரைச் சேர்ந்த ஹிபா பி, காத்மாண்டுவின் சுமன் கார்கி மற்றும் சூரத்தைச் சேர்ந்த ராகவ் நரேஷ் குப்தா ஆகியோர் தலா 361 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தேர்ச்சி விகிதம் மற்றும் புள்ளிவிவரங்கள்
இந்த ஆண்டு ஜனவரி மாத சுழற்சியில் நடைபெற்ற தேர்வில், மாணவர்களை விட மாணவிகளே அதிக எண்ணிக்கையில் பங்கேற்றிருந்தாலும், தேர்ச்சி விகிதத்தில் மாணவர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
மாணவர்கள்: 57,238 பேர் தேர்வு எழுதியதில், 11,523 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் (20.13%).
மாணவிகள்: 52,456 பேர் தேர்வு எழுதியதில், 9,576 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் (18.26%).
அடுத்த கட்டம் என்ன?
சிஏ பவுண்டேஷன் தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்களும், ஒட்டுமொத்தமாக 50 சதவீத மதிப்பெண்களும் எடுக்க வேண்டியது அவசியமாகும். 70 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு ‘Pass with Distinction’ அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், சார்ட்டட் அக்கவுண்டன்ட் படிப்பின் அடுத்த நிலையான சிஏ இன்டர்மீடியட் (CA Intermediate) படிப்பிற்குப் பதிவு செய்யத் தகுதி பெறுவார்கள்.
முந்தைய தேர்வுகளுடன் ஒப்பீடு
கடந்த தேர்வுகளை ஒப்பிடுகையில் இந்த முறை தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 2025: 14.78% தேர்ச்சி.
மே 2025: 15.09% தேர்ச்சி.
முன்னதாக, கடந்த மார்ச் 1-ஆம் தேதி வெளியான சிஏ பைனல் (CA Final) முடிவுகளில், கர்னாலைச் சேர்ந்த தீக்ஷா கோயல் தேசிய அளவில் முதலிடம் பிடித்தார் என்பதும், மொத்தம் 7,590 பேர் புதிய பட்டயக் கணக்காளர்களாகத் தகுதி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



