தமிழகத்தில் நிலவி வரும் வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் (Commercial LPG) தட்டுப்பாட்டை சமாளிக்கவும், உணவகங்கள் மற்றும் சிறு தொழில்களைப் பாதுகாக்கவும் தமிழக அரசு பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. இன்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
மின்சார அடுப்புகளுக்கு மாறினால் யூனிட்டிற்கு ரூ.2 மானியம்
எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் கிளவுட் கிச்சன்கள் (Cloud Kitchens) தடையின்றி இயங்குவதை உறுதி செய்ய அரசு புதிய மின் கட்டண சலுகையை அறிவித்துள்ளது.
எரிவாயுவிற்கு மாற்றாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும் போது ஏற்படும் கூடுதல் மின் நுகர்விற்கு, ஒரு யூனிட்டிற்கு ரூ.2 மானியம் வழங்கப்படும்.
இந்தச் சலுகை பெரிய ஹோட்டல்கள் முதல் சிறு டீக்கடைகள் மற்றும் வீடுகளில் உணவு தயாரிப்பவர்கள் வரை அனைவருக்கும் பொருந்தும்.
மத்திய அரசின் சிலிண்டர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வரை இந்த மானியம் நடைமுறையில் இருக்கும்.
மின் உபகரணங்கள் வாங்க கடன் உதவி
மின் அடுப்புகள் மற்றும் மின் சூடேற்றிகள் (Electric Heaters) வாங்க விரும்பும் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:
UYEGP திட்டம்: 25% மானியம் (அதிகபட்சம் ரூ. 3.75 லட்சம்).
மகளிர் தொழில் முனைவோர்: 25% மானியம் (அதிகபட்சம் ரூ. 2 லட்சம்).
அண்ணல் அம்பேத்கர் திட்டம்: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 35% மானியம் (ரூ. 1 கோடி வரை).
மாற்று எரிபொருள் மற்றும் விதிமுறை தளர்வு
தொழிற்சாலைகள் உற்பத்தியைத் தொடர LPG அல்லது CNG-க்கு மாற்றாக விறகு, மண்ணெண்ணெய், மற்றும் பயோமாஸ் போன்ற எரிபொருட்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் முன்அனுமதி (CTE/CTO) பெறத் தேவையில்லை; அரசிடம் தகவல் தெரிவித்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு சலுகை
உழவர் சந்தை: சிலிண்டர் தட்டுப்பாட்டால் விற்பனை பாதிக்கப்படாமல் இருக்க, விவசாயிகள் 194 உழவர் சந்தைகளில் எவ்வித தடையுமின்றி விளைபொருட்களை விற்கலாம்.
ஆவின் கொள்முதல்: பால் உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் உபரி பாலை எவ்வித கட்டுப்பாடும் இன்றி கொள்முதல் செய்ய ஆவின் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் – 10 நாள் கையிருப்பு
பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்க, குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் கூடுதலாக 3,228 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்குத் தேவையான வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். நிலைமையைக் கண்காணிக்க தலைமைச் செயலாளர் தலைமையிலும், மாவட்ட அளவில் ஆட்சியர்கள் தலைமையிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.



