உக்ரைன்-ரஷ்யா போர் உள்ளிட்ட உலகளாவிய பதற்றங்களால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க, சர்வதேச எரிசக்தி ஆணையம் (IEA) முக்கியப் பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் நுகர்வைக் குறைத்து பொருளாதாரத்தைச் சீராக வைத்திருக்க 10 அம்சத் திட்டங்களை அந்த ஆணையம் முன்வைத்துள்ளது.
பயணங்களில் மாற்றம் அவசியம்
எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மக்கள் தங்கள் அன்றாடப் பயண முறைகளில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
பகிர்வுப் பயணம் (Car Pooling): அலுவலகம் செல்பவர்கள் தனித்தனி கார்களில் செல்வதைத் தவிர்த்து, நண்பர்கள் அல்லது சக ஊழியர்களுடன் இணைந்து ஒரே காரில் பயணிக்க வேண்டும்.
வேகக் கட்டுப்பாடு: நெடுஞ்சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது வேக வரம்பைக் குறைப்பதன் மூலம் எரிபொருள் வீணாவதைத் தடுக்கலாம்.
விமானப் பயணம்: மிக அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே விமானப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும்; மற்ற நேரங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம்.
வீட்டிலிருந்தே வேலை (Work From Home)
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், எரிபொருள் தேவையைச் சுருக்கவும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய (WFH) ஊக்குவிக்க வேண்டும். இது தனிநபர் சேமிப்புடன் நாட்டின் எரிபொருள் தேவையையும் பெருமளவு குறைக்கும்.
மாற்று எரிசக்திக்கு மாறுதல்
புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதை நிறுத்தப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது:
மின்சார வாகனங்கள் (EV): பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் பதில் மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.
சூரிய மின் உற்பத்தி: வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் சோலார் பேனல்கள் அமைப்பதன் மூலம் மின் தேவையைப் பூர்த்தி செய்யலாம்.
மின்சார அடுப்புகள்: சமையல் எரிவாயு (LPG) பயன்பாட்டைக் குறைக்க மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.
உயிரி எரிபொருள்: எத்தனால் கலந்த பெட்ரோல் போன்ற உயிரி எரிபொருள் பயன்பாட்டை அரசுகள் முன்னெடுக்க வேண்டும்.
இந்த மாற்றங்களை உலக நாடுகள் உடனடியாகச் செயல்படுத்தினால், வரும் காலங்களில் ஏற்படக்கூடிய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை எதிர்கொள்ள முடியும் என பாரீஸைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச எரிசக்தி ஆணையம் தெரிவித்துள்ளது.



