புதுச்சேரி: 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கூட்டணிகளில் முக்கிய மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் தனது கூட்டணியை விரிவுபடுத்தி, நேயம் மக்கள் கழகத்திற்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் சார்பில் ஏற்கனவே 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை முன்னிட்டு, நேயம் மக்கள் கழகத்தின் நிறுவனர் தலைவர் நேரு (எ) குப்புசாமி எம்.எல்.ஏ., தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், முன்பு அறிவிக்கப்பட்ட 30 தொகுதிகளில் இருந்து “உருளையன்பேட்டை” மற்றும் “தட்டாஞ்சாவடி” ஆகிய இரண்டு தொகுதிகள், கூட்டணிக் கட்சியான நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது கட்சித் தலைவரின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இந்த ஒதுக்கீடு, புதுச்சேரி அரசியல் சூழலில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.



