புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றி செயல்படும் தனியார் பள்ளிகளில், பிளஸ்-2 பொதுத்தேர்வில் 98.57 சதவீத தேர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தின் அனைத்து அரசு பள்ளிகளும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றி வரும் நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் மட்டும் தமிழக அரசு பாடத்திட்டத்தில் இயங்கி வருகின்றன.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருந்து மொத்தம் 7,497 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 7,390 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்றவர்களில் 3,811 மாணவர்களும், 3,579 மாணவிகளும் அடங்குவர். ஆண்கள் தேர்ச்சி விகிதம் 97.97 சதவீதமாகவும், பெண்கள் தேர்ச்சி விகிதம் 99.22 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
பிராந்திய வாரியாக பார்க்கையில், புதுச்சேரியில் 98.65 சதவீதமும், காரைக்காலில் 97.67 சதவீதமும் தேர்ச்சி கிடைத்துள்ளது.
மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள மொத்தம் 100 தனியார் பள்ளிகளில் 63 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. இதில் புதுச்சேரியில் 54 பள்ளிகளும், காரைக்காலில் 9 பள்ளிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தாண்டு தேர்வில் பல்வேறு பாடங்களில் மொத்தம் 500 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதன்படி இயற்பியலில் 3 பேர், வேதியியலில் 6 பேர், உயிரியலில் 9 பேர், கணிப்பொறி அறிவியலில் 190 பேர், கணிதத்தில் 5 பேர், பொருளியலில் 12 பேர், வணிகவியலில் 27 பேர், கணக்குப் பதிவியலில் 36 பேர், கணிப்பொறி பயன்பாட்டில் 69 பேர் மற்றும் பிரெஞ்சு மொழியில் 123 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இந்த தேர்வு முடிவுகள் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



