பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த ஆண்டு 95.2 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அன்பில் மகேஷ் தெரிவித்தபோது பெருமகிழ்ச்சி அடைந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மாணவர்கள் மேற்படிப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மனம் தளராமல் அடுத்தடுத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கல்வியே வாழ்வின் வெற்றிக்கான அடித்தளம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில், “தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உயர்கல்விக்கான துறைகளை தேர்ந்தெடுக்கும்போது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளை கேட்டு சரியான பாதையை தேர்வு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும், “இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துவண்டு விட வேண்டாம். வாழ்க்கையில் வெற்றி பெற பல வாய்ப்புகள் உள்ளன. துணைத்தேர்வுகள் மூலம் வெற்றி பெற முயற்சி செய்யுங்கள்” என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்.
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள பதிவில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த பல்வேறு தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பலனாக இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.17 சதவீதம் உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று தலைமையாசிரியர்களுடன் ஆலோசனை நடத்தி, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மறுவாய்ப்பு தேவைப்படும் மாணவர்கள் துணைத்தேர்வுகளை பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.



