குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தென்காசியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவில், குற்றாலம் பழைய அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு போதுமான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத செயல்களை தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தென்காசி மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், குற்றாலநாதசுவாமி கோயில் மற்றும் அருவியைச் சுற்றியுள்ள 152 தற்காலிக கடைகள் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவற்றில் 80 கடைகளுக்கு மட்டுமே ஏலம் அல்லது ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், மீதமுள்ள 72 கடைகள் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஏலத்தில் சேர்க்கப்படாது என்றும் கூறப்பட்டது.
மேலும், தீ விபத்து ஏற்பட்ட தெற்கு வெளிப் பிரகாரத்தில் இருந்த 62 கடைகள் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் கோயில் நந்தவனம் அமைக்கப்பட உள்ளதாகவும், மற்றொரு பகுதியில் இருந்த 10 கடைகள் அகற்றப்பட்டு, அந்த இடம் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஏலத்தில் விடப்படும் 80 கடைகளிலும் எரிவாயு சிலிண்டர் மற்றும் மரவிறகு பயன்படுத்தி சமையல் செய்ய தடை விதிக்கப்படும் என்றும், தீ அபாயம் ஏற்படாத பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், நந்தவனத் திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், குற்றால சீசனை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைத்து, கூட்ட நெரிசல், மருத்துவ வசதிகள், வாகன போக்குவரத்து மற்றும் தீ விபத்து தடுப்பு உள்ளிட்ட அம்சங்களை தொடர்ந்து கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



