குடும்பத்தாருடன் வருகை
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி, இந்த முறை தனது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது சொந்த ஊரான காரைக்குடி தொகுதியில் களமிறக்கியுள்ளது. இன்று மதியம் காரைக்குடி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சீமான் தனது வேட்புமனுவை சமர்ப்பித்தார். இந்த நிகழ்வின் போது அவரது தாயார் மற்றும் மனைவி கயல்விழி ஆகியோர் உடனிருந்தனர்.
பலமுனைப் போட்டி
காரைக்குடி தொகுதியில் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக சார்பில் தேர்போகி பாண்டி, மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரபு ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். திமுக கூட்டணியில் இத்தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், அக்கட்சியின் வேட்பாளர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இலவசங்களுக்கு எதிராக ஆவேசம்
வேட்புமனுத் தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், திராவிடக் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளைக் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:
“படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவனுக்கு வேலை கொடுப்பதற்குப் பதிலாக, மாதம் 4 ஆயிரம் ரூபாய் தருவதாகச் சொல்பவர் எப்படி நல்ல தலைவராக இருக்க முடியும்? தமிழகம் ஏற்கனவே 10.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது. இப்போது அறிவிக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் பல லட்சம் கோடி கடன் வாங்குவார்கள். கடன் வாங்கிச் செய்யும் திட்டங்கள் எப்போதுமே தரமாக இருப்பதில்லை.”
மேலும், “இலவசங்களை நான் ஒரு இனத்தின் மகனாக என் தன்மானத்திற்கு எதிரானதாகப் பார்க்கிறேன். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவனுக்கு 10 லட்சம் கொடுத்து ஊக்கப்படுத்திய அரசு இது. இயற்கை வளங்களைச் சுரண்டிவிட்டு, வரிப்பணத்தை உயர்த்தி, அதிலிருந்து இலவசம் கொடுப்பதை மக்கள் ஏன் கையேந்திப் பெற வேண்டும்? மக்களிடம் தற்சார்பு நிலையை உருவாக்க இந்த அரசுகளுக்கு விருப்பமில்லை” என ஆவேசமாகத் தெரிவித்தார்.



