தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று காலை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
மனுத்தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது வேட்புமனு தாக்கலுக்கு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்ததாக கூறினார். கடந்த ஆறு மாதங்களாக வில்லிவாக்கம் தொகுதியை நேரடியாக ஆய்வு செய்து வருவதாகவும், அங்கு ஒரு எம்எல்ஏ அலுவலகம் கூட இல்லாத நிலை இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், அருகில் உள்ள கொளத்தூர் போன்ற தொகுதிகள் அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்தப் பகுதிகளில் மக்கள் நலப் பணிகள் குறித்து முதல்வர் எந்தவிதமான ஆய்வும் மேற்கொண்டாரா என்பது தெரியவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
தவெக தலைவர் விஜய் அறிவித்தபடி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் குறித்து மதிப்பீட்டு கூட்டங்கள் நடத்தப்படும் என்றும், வெளிப்படையான ஆட்சியை உருவாக்குவதே தங்களின் நோக்கம் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தவெக கட்சியில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், அந்த வாய்ப்புகள் பொருளாதார பின்னணி அல்லது சாதி அடிப்படையில் அல்லாமல் சமமாக வழங்கப்படுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு எம்எல்ஏவும் சாதி, மதங்களை தாண்டி நல்ல நிர்வாகியாகவும், மக்களின் பாதுகாவலராகவும் செயல்பட வேண்டும் என்பதே கட்சித் தலைவர் விஜய்யின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.



