அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் அயோத்திக்கு சென்றார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 8,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பிழை வழங்கினர். இதை தொடர்ந்து, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்றனர்.
புறப்படும் முன்பு ரஜினி நிருபர்களுடன் பேசியதாவது
“ராமஜென்ம பூமிக்கு செல்வதில் மிக்க மகிழ்ச்சி 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஒரு பிரச்னை இது. உச்சநீதிமன்றம் இதற்கு தீர்வு கொடுத்தது. தற்போது அது நிறைவேறியிருக்கிறது. இந்த நாள் வரலாற்றில் மறக்க முடியாத முக்கியமான நாள். மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்றார்.
நடிகர் தனுஷும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அயோத்தி புறப்பட்டார். ரஜினி சென்ற அதே விமானத்தில் அவரும் புறப்பட்டு சென்றார்.