தமிழ்நாடு முதலமைச்சரின் தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவு திட்ட விரிவாக்கத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்ததையடுத்து, ஆம்பூர் நகராட்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. விழாவிற்கு நகராட்சி தலைவர் ஏஜாஸ் அஹமத் தலைமை தாங்கினார். நகராட்சி துணைத் தலைவர் எம் ஆர் ஆறுமுகம், ஆணையாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் கலந்து கொண்டு 323 தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், நிரந்தர தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், ஓட்டுநர்கள், கொசு மருந்து அடிப்போர் இந்த திட்டத்தில் பயனடைய இருக்கிறீர்கள்.
நீங்கள் காலை 6 மணிக்கு வந்து பணியில் சேருகிறீர்கள்.உங்கள் உடல் நலம் கருதியும் உங்கள் நிதிச் சுமையை நீக்கவும் தமிழ்நாடு முழுவதும் இந்த உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கின்றார். நமது ஆம்பூர் நகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 36 வார்டு பணியாளர்கள் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் , ஓட்டுநர்கள உள்ளிட்ட 323 தூய்மைப் பணியாளர்கள் தினமும் இந்த காலை சிற்றுண்டி பெற உள்ளனர் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திமுக அவைத் தலைவர் ஆனந்தன், நகர திமுக கிழக்கு பொறுப்பாளர் ஷபீர் அஹ்மத், கவுன்சிலர்கள் வசந்த் ராஜ், அம்சவேணி ஜெயக்குமார், கௌரி பழனி ,சாந்தகுமாரி விஜயன், இம்தியாஸ் அஹ்மத், நூருல்லா, நவநீதம் வால்டர், நகராட்சி பொறியாளர் சந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



