திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள பூமாலை வணிக வளாகத்தில் இயற்கை விவசாயிகள் வார சந்தை அரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ், இ.ஆ.ப., திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட வேங்கிக்கால் பகுதியில் இன்று (மார்ச் 7) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் இயற்கை விவசாயிகள் வார சந்தை அரங்கத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன் முன்னிலை வகித்தார்.
இந்த வார சந்தை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், சிறுதானியங்கள், தேன், விதைகள் உள்ளிட்ட பொருட்களை விவசாயிகள் நேரடியாக பொதுமக்களுக்கு தரமான முறையிலும் குறைந்த விலையிலும் விற்பனை செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாநகராட்சி அடி அண்ணாமலை பகுதியில் உள்ள அபய மண்டபம் அருகில் ரூ.49.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டி மாவட்ட ஆட்சியர் பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் வேங்கிக்கால் பகுதியில் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கிளை நூலகக் கட்டிடத்தையும் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து, நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சிகளில் மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் தனபதி, மாநகராட்சி துணை மேயர் ராஜாரங்கம், மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, மாவட்ட மைய நூலகர் வள்ளி, திருவண்ணாமலை வட்டாட்சியர் மற்றும் பல துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



