இந்தியா – ஜப்பான் இடையிலான வருடாந்திர கூட்டு மாநாடு நேற்று டெல்லியில் கோலாகலமாகத் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக 3 நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி வந்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சியும் அதிகாரப்பூர்வமாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
உலகின் மிகப்பெரிய கார் ஆலைகளில் ஒன்று தொடக்கம்
மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, டெல்லியில் நேற்று மாலை நடைபெற்ற இந்தியா – ஜப்பான் கூட்டு பொருளாதார மன்றக் கூட்டத்தின் போது, ஹரியானா மாநிலம் கார்கோடாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கார் உற்பத்தி ஆலையை இரு பிரதமர்களும் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தனர்.
- முதலீடு: ரூ. 35,000 கோடி
- பரப்பளவு: சுமார் 800 ஏக்கர் (மாருதி சுசூகி நிறுவனம்)
- உற்பத்தித் திறன்: முதற்கட்டமாக ஆண்டுக்கு 5 லட்சம் கார்கள். பின்னர் படிப்படியாக இது 10 லட்சமாக உயர்த்தப்படும்.
குறிப்பு: இந்த ஆலை உலகின் மிகப்பெரிய கார் தொழிற்சாலைகளில் ஒன்றாகத் திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தம்: ரேடார்களுக்குச் சிக்காத போர்க்கப்பல் தொழில்நுட்பம்
இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (Make in India) திட்டத்தின்கீழ் போர்க்கப்பல்களுக்குத் தேவையான சிறப்பு ஆன்டெனாக்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்தத் தொழில்நுட்பம் மூலம் எதிரிகளின் ரேடார்களால் இந்திய மற்றும் ஜப்பானிய போர்க்கப்பல்களைக் கண்டுபிடிக்க முடியாது. மேலும், எதிர்காலத்தில் இரு நாடுகளும் இணைந்து போர்க்கப்பல்களைத் தயாரிக்கவும் கொள்கை ரீதியாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் இரு நாட்டுப் பிரதமர்களும் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
- இந்தியாவின் ஆட்டோமொபைல் மற்றும் மின்னணு துறை வளர்ச்சிக்கு ஜப்பான் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. தற்போது இரு நாடுகளும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்றுகின்றன.
- பாதுகாப்பு மட்டுமின்றி மருந்து உற்பத்தி, மருத்துவ உபகரணங்கள், உயிரி தொழில்நுட்பம் (Biotechnology) மற்றும் நிதிச் சேவை தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
- ‘இந்தியா-ஜப்பான் பயோ காஸ்’ திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் புதிதாக 1,000 பயோ காஸ் மற்றும் இயற்கை உரத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு கிராமங்கள் மேம்படுத்தப்படும்.
- கச்சா எண்ணெய் கையிருப்பை அதிகரிக்கத் தேவையான தொழில்நுட்ப உதவியை ஜப்பான் வழங்கவுள்ளது. பேட்டரி, பசுமை ஹைட்ரஜன், அணுசக்தி, கப்பல் கட்டுமானம், விமானப் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி பேசியதாவது:
- இந்தியாவின் பெட்ரோலிய கையிருப்பை அதிகரிக்கவும், எரிசக்தி மற்றும் அரியவகை கனிமங்கள் தேவையைப் பூர்த்தி செய்யவும் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும்.
- ஜப்பான் – இந்திய கடற்படைகள் இணைந்து விரைவில் கூட்டுப் போர்ப்பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன. ராணுவத் துறையில் இரு நாடுகளும் இணைந்து ஆயுதங்களை உற்பத்தி செய்யும்.
2027-ல் புல்லட் ரயில்: 2 மணி நேரத்தில் மும்பை டூ அகமதாபாத்
பொருளாதார மன்றக் கூட்டத்தில் பேசிய ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, “மும்பை – அகமதாபாத் இடையே 2027-ஆம் ஆண்டில் புல்லட் ரயில் சேவையைத் தொடங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஜப்பான் வழங்கும். இந்த வழித்தடத்தில் ஜப்பானின் அடுத்த தலைமுறை புல்லட் ரயிலான ‘இ-10 ஷிங்கன்சென்’ (E-10 Shinkansen) அறிமுகம் செய்யப்படும்” என்றார்.
மணிக்கு 320 முதல் 400 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில்கள் மூலம், மும்பையிலிருந்து அகமதாபாத்திற்கு வெறும் 2 மணி நேரத்தில் சென்றுவிட முடியும்.

“என் தங்கை டகாய்ச்சி” – நெகிழ்ந்த பிரதமர் மோடி!
மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது, “ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை சனே டகாய்ச்சி பெற்றுள்ளார். அவர் எனது அழகிய இளம் தங்கை. புத்தமதப் பாரம்பரியத்தின் மையமாக விளங்கும் ஜப்பானின் நாரா பகுதியைச் சேர்ந்தவர் அவர்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய ஜப்பான் பிரதமர், “பிரதமர் மோடி என்னை தங்கை என்று அழைத்து உறவு பாராட்டியுள்ளார். அவர் எனது அண்ணன். நாங்கள் இருவரும் அண்ணன், தங்கையாக இணைந்து செயல்படுவோம்” என்று நெகிழ்ந்தார்.
டாலருக்குப் பதில் ரூபாய் – யென் கரன்சி வர்த்தகம்
இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் தற்போது டாலர் மதிப்பில் வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றன. இதற்கு மாற்றாக, இனி இந்திய ரூபாய் (INR) மற்றும் ஜப்பானிய யென் (JPY) ஆகிய உள்ளூர் கரன்சிகளிலேயே நேரடியாக வர்த்தகம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டே செய்யப்பட்ட நிலையில், தற்போது இத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்த இரு நாடுகளும் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இதன்மூலம் இரு நாட்டு நிறுவனங்களுக்கும் நேரமும், பணமும் பெருமளவு மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



