வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான ஜோசப் விஜயின் பிறந்தநாள் பேனர்கள், ‘அருணை தமிழ்’ நாளிதழின் செய்தி வெளியீட்டைத் தொடர்ந்து அதிரடியாக அகற்றப்பட்டன.
கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தினர் குடியாத்தம் நகரின் பல்வேறு பகுதிகளில் வாழ்த்து பேனர்களை அமைத்திருந்தனர். குறிப்பாக அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகம் போன்ற முக்கிய பொது இடங்களில் பெரிய அளவிலான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் இருக்கும் பேனர்களை உடனே அகற்றுமாறு தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், பல முக்கிய இடங்களில் பேனர்கள் அகற்றப்படாமல் தொடர்ந்து அப்படியே இருந்தன.
இதனால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் இந்த பேனர்களை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் இந்த நியாயமான கோரிக்கையை முன்னிறுத்தி ‘அருணை தமிழ்’ நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
நாளிதழ் செய்தியின் அதிரடி எதிரொலியாக, நகராட்சி ஊழியர்களும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் உடனடியாக களத்தில் இறங்கினர். குடியாத்தம் நகரின் முக்கிய சந்திப்புகளில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பேனர்களும் இன்று கூட்டு முயற்சியுடன் பாதுகாப்பாக அகற்றப்பட்டன.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி உடனடி நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கும், செய்தி வெளியிட்ட நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் தங்களது பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளனர்.



