மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்திய திருத்தத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஜூன் 19-ஆம் தேதி, கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தமும் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டது. இந்த திருத்தத்திற்கு அதிமுக, பாமக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஜூன் 18-ஆம் தேதி எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்ட தீர்மான நகலில் இடம்பெறாத திருத்தம், சட்டப்பேரவையில் உரிய விவாதமின்றி நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த திருத்தம் ஒருமனதாக நிறைவேற்றப்படாத போதிலும், அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் முடிவில், தமிழக தலைமைச் செயலாளர், சட்டப்பேரவை செயலாளர் மற்றும் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.



