டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் பார் டெண்டர் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வி. செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னதாக, கடந்த ஜூலை 28-ஆம் தேதி தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை, டாஸ்மாக் மதுபான கொள்முதல், பார் டெண்டர் ஒதுக்கீடு, சட்டவிரோதமாக பார்கள் நடத்த அனுமதித்தது, அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில், டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன், முன்னாள் மண்டல மேலாளர்கள் மற்றும் செந்தில் பாலாஜியின் நெருங்கிய தொடர்புடையவர்களும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
வழக்குப்படி, 2021-ஆம் ஆண்டு கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 857 டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், டெண்டரில் பங்கேற்றவர்கள் ஒரே வங்கியில் இருந்து தொடர்ச்சியான எண்களில் டிமாண்ட் டிராஃப்ட் எடுத்து முன்பணம் செலுத்தியதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், ஆவணங்களில் மூடப்பட்டதாகக் காட்டப்பட்ட 284 பார்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக செயல்பட்டதாகவும், இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், போக்குவரத்து டெண்டர் மற்றும் காலி பாட்டில் ஒப்பந்தங்களிலும் முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்ஜாமீன் மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி, முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக நேரடி குற்றச்சாட்டு எதுவும் இல்லை என்றும், அரசியல் நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
இதற்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியன், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற ஆரம்பகட்ட தகவல்கள் இருப்பதாகவும், காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் என்றும் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முறைகேடு மற்றும் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கான ஆரம்பகட்ட ஆதாரங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்கலாம் என்பதற்கான முகாந்திரம் உள்ளதாகவும், விசாரணைக்காக காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் கூறி, செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



