“அதிமுக கூட்டணி என்பது மறைந்து இப்போது அது பாஜக கூட்டணியாக மாறிவிட்டது. டெல்லிக்கு ஓடுவதைத்தான் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குதல் என்று சொல்கிறாரா?” என திமுக முதன்மைச் செயலாளர் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக டெல்லி சென்றுள்ள நிலையில், அவரை விமர்சித்து கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ:
அமித்ஷா அனுப்பியது அழைப்பா? சம்மனா?
மத்திய புலனாய்வு அமைப்புகளான அமலாக்கத் துறையும், சிபிஐயும் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்புவது போலத்தான், அமித்ஷா தற்போது எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு அழைத்திருக்கிறார். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை என்பது கூட்டணிக் கட்சிகள் பரஸ்பரம் பேசி எடுக்கும் முடிவு அல்ல, இது அமித்ஷாவின் உத்தரவுக்காகக் காத்திருக்கும் ‘சம்மன் கூட்டணி’ என்று கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.
அதிமுக அலுவலகத்திற்குப் பூட்டு போடுங்கள்!
“தமிழ்நாட்டில் அதிமுகதான் கூட்டணிக்குத் தலைமை என்று தம்பட்டம் அடிக்கும் பழனிசாமி, ஏன் இதுவரை ஒருமுறை கூட அதிமுக அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை?” என நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.
“கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சிதான் மற்ற கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்க வேண்டும். ஆனால், அமித்ஷா வீட்டில் காத்துக்கிடக்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்திற்குப் பெரிய திண்டுக்கல் பூட்டு போட்டுவிட்டுத் தேர்தல் முடியும் வரை மூடி வைத்துவிடுங்கள்” என அவர் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.
‘ஐயா’ பட காமெடி போல இருக்கிறது!
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை நடிகர் வடிவேலுவின் திரைப்படக் காட்சியுடன் ஒப்பிட்டுள்ள நேரு, “இரவு 8:30 மணிக்குச் சந்திப்பு எனச் சொல்லிவிட்டு, இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்து அமித்ஷா சந்தித்திருக்கிறார். இது ‘ஐயா’ படத்தில் அடிவாங்கிவிட்டு வெளியே வரும்போது ‘இந்த டீலிங் நமக்குள்ளேயே இருக்கட்டும்’ என வடிவேலு பேசும் காமெடி வசனத்தைப் போலவே பழனிசாமிக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது” என்று கிண்டல் செய்துள்ளார்.
அண்ணா அதிமுகவா? அமித்ஷா அதிமுகவா?
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மூன்று முறை டெல்லி சென்றுள்ள பழனிசாமி, அதிமுகவின் அடிநாதமான கொள்கைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டதாக நேரு குற்றம் சாட்டினார். “கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்களான அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோரும் அமித்ஷாவையே சந்திக்கிறார்கள். அப்படியென்றால் இது அண்ணா பெயரிலான அதிமுகவா அல்லது அமித்ஷா பெயரிலான அதிமுகவா?” என அவர் வினவியுள்ளார்.
தமிழ்நாடு Vs டெல்லி அணி
“கட்சியையே டெல்லியில் அடமானம் வைத்த பழனிசாமி, நாளை ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டையும் அடகு வைக்கத் துணிவார். அதனால்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தத் தேர்தலை ‘தமிழ்நாடு அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையிலான போட்டி’ என்று சரியாகக் குறிப்பிடுகிறார்” என்று நேரு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதியாக, மானத்தைப் பெரிதாகக் கருதும் தமிழ்நாட்டு மக்கள், இந்த ‘அடிமைக் கூட்டணிக்கு’ தேர்தலில் மரண அடி கொடுப்பார்கள் என்றும், திராவிட மாடல் ஆட்சியின் வெற்றி உறுதி என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



