சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வரும் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீவஸ்தவா ஓய்வு – புதிய நியமனம்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வந்த நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா இன்றுடன் (மார்ச் 05) பணி ஓய்வு பெறுகிறார். இதனைத் தொடர்ந்து, காலியாகும் அந்த இடத்திற்கு புதிய தலைமை நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.
மத்திய அரசின் மூலம் அனுப்பப்பட்ட இந்தப் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது.
யார் இந்த எஸ்.ஏ. தர்மாதிகாரி?
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, சட்டத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர்:
கல்வி: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர்.
ஆரம்ப காலம்: 1992-ம் ஆண்டு முதல் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கினார்.
அரசு வழக்கறிஞர்: 2000-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை வருமான வரித்துறை, வங்கி மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.
நீதிபதி பணி: 2016-ல் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2018-ல் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
கேரள உயர் நீதிமன்றம்: கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வந்தார்.
பதவி ஏற்பு எப்போது?
புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஏ. தர்மாதிகாரி, நாளை அல்லது நாளை மறுநாள் முறைப்படி பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்குத் தமிழக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.



