தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசின் முதல் நிதிநிலை அறிக்கை சில துறைகளில் முன்னேற்றத்திற்கான வழிவகைகளை ஏற்படுத்தினாலும், பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொள்ளவில்லை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2026-27-ம் ஆண்டுக்கான தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் கல்வி, மகளிர் நலம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் சில அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பாக தெளிவான திட்டங்கள் இடம்பெறவில்லை.
வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும். அதேபோல், ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்தும் அறிவிப்பு இடம்பெறவில்லை.
குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.2,500-ஆக உயர்த்துவது, ஆண்டுக்கு ஆறு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவது, அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயண வசதி அளிப்பது போன்ற தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாதது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வந்த காலை உணவுத் திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தியிருப்பதும், மூத்த குடிமக்களுக்காக ஆயிரம் நடமாடும் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கவை என தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் பயிர்க் கடன் முழுமையான தள்ளுபடி குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாகவும், பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு முந்தைய ஆண்டைவிட குறைக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசு ஒப்பந்தப் பணிகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், குறைந்த மதிப்பீட்டில் ஒப்பந்தம் பெறும் நிறுவனங்களால் பணிகளின் தரம் பாதிக்கப்படாத வகையில் அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தங்க மோதிரத் திட்டம், உயர்கல்வி போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள், தொழிற்பயிற்சி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு பிரிவு தொடங்குதல், மின்சார வாகனங்களுக்கு ஊக்குவிப்பு உள்ளிட்ட சில அறிவிப்புகள் கவனம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது மற்றும் கூவம், அடையாறு நதிகளை சீரமைப்பது போன்ற அறிவிப்புகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 150 நாட்கள் வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதற்காக ரூ.100 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது போதுமானதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தவெக அரசின் நிதிநிலை அறிக்கை சில பிரிவுகளில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கினாலும், பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறியுள்ளது,” என மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.



