தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அது ஏமாற்றம் அளிப்பதாகவும், இது “வெற்று பட்ஜெட்” என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
“தவெக தாக்கல் செய்திருக்கும் முதல் பட்ஜெட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை இந்த பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை. 15 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை இலக்காகக் கொண்ட பட்ஜெட் என்று கூறப்பட்டாலும், அதற்கான தொலைநோக்கு திட்டங்கள் இதில் இடம்பெறவில்லை.
கல்வித் துறைக்கு முந்தைய ஆட்சியைவிட குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளை மேம்படுத்த டிஜிட்டல் வகுப்பறைகள், டிஜிட்டல் பலகைகள் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை ஏற்கனவே மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. தெலங்கானா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழ்நாடும் அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
காமராஜர் பெயரில் புதிய பள்ளிகள் தொடங்கப்படுவது வரவேற்கத்தக்கது. அதேநேரம், நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும். ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு நவோதயா பள்ளிகள் மிகுந்த பயனளித்து வருகின்றன.
கிராமப்புற கலை வளர்ச்சிக்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் பயன்களை தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்த வேண்டும். மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை மாநில அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும்.
நெய்தல் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.200 கோடி, சென்னை சாலை மேம்பாட்டிற்கு ரூ.25 கோடி, புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.10 கோடி, பனைமர மேம்பாட்டிற்கு ரூ.16 கோடி, நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ரூ.250 கோடி என அறிவிக்கப்பட்டுள்ள நிதி, திட்டங்களின் தேவைக்கு போதுமானதாக இல்லை.
மேலும், தேர்தல் வாக்குறுதிகளான மகளிர் உதவித்தொகை உயர்வு, ஆண்டுக்கு ஆறு இலவச எரிவாயு சிலிண்டர்கள், மாநிலம் முழுவதும் இலவச பேருந்து சேவை, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கையில் உறுதியான அறிவிப்புகள் இடம்பெறவில்லை.
விவசாயத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியும் போதுமானதாக இல்லை. இருப்பினும், மூத்த குடிமக்களுக்கான ஆன்மிகச் சுற்றுலா, ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களை சீரமைத்தல், வயது முதிர்ந்தோருக்கான நடமாடும் மருத்துவமனை மற்றும் இளைஞர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் திட்டங்கள் போன்றவை வரவேற்கத்தக்கவை.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்த நிதிநிலை அறிக்கை ஒரு பற்றாக்குறை பட்ஜெட்டாகவே உள்ளது,” என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.



