தமிழக அரசின் பட்ஜெட்டில் சமூக நீதித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் அங்கனூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“தமிழக பட்ஜெட்டின் முழுமையான விவரங்களை ஆய்வு செய்த பிறகே விரிவான கருத்துகளை தெரிவிக்க முடியும். இருப்பினும், தற்போது வெளியாகியுள்ள சில முக்கிய அறிவிப்புகள் மிகவும் பாராட்டத்தக்கவை.
பள்ளி மாணவர்களுக்கு தலைக்கவசம் மற்றும் தேவையான உபகரணங்களை பாதுகாப்பாக வைக்க வசதியுள்ள மிதிவண்டிகள் வழங்கப்படுவது சிறப்பான திட்டமாகும். மேலும், ‘கலைஞர் கனவு திட்டம்‘ தற்போது ‘வெற்றி வீடு திட்டம்‘ என பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன், வீடு கட்டும் நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தத் தொகையை உயர்த்த வேண்டும் என்று கடந்த ஆட்சிக் காலத்திலேயே விசிக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். தற்போது அரசு அதனை நடைமுறைப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
அதேபோல், சமூக நீதித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. பண்டிதர் அயோத்திதாசர் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.419 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டத்திற்கும் கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சமூக நீதித் துறையை சுதந்திரமாக செயல்படச் செய்து, அதற்கான நிதியை முழுமையாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. அதன் பிரதிபலிப்பாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது,” என்றார்.



