தமிழக அரசின் முதல் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “சொந்தமாகவும் யோசிக்காத, சொன்னதையும் செய்யாத, சுரத்தில்லாத, புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் அவர் கூறியதாவது:
“இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட் பற்றி, ரீல்ஸ் முதல்வருக்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், ‘பிளாஸ்ட், பிளாஸ்ட்’ ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘வேஸ்ட், வேஸ்ட்’ என்று சொல்லும்படிதான் இருக்கிறது. இது திராவிட மாடல் அரசின் திட்டங்களின் ரீமேக் வெர்ஷன் பட்ஜெட்.
விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்தும், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான புதிய தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
மேலும், ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள், முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் பற்றியும் இந்த பட்ஜெட்டில் எதுவும் கூறப்படவில்லை.
மொத்தத்தில், சொந்தமாகவும் யோசிக்காத, சொன்னதையும் செய்யாத, சுரத்தில்லாத, புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



