திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை நாளன்று தீபம் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கடந்த ஆண்டு திருக்கார்த்திகை நாளன்று தீபம் ஏற்ற அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, ஆண்டுதோறும் கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
அந்த உத்தரவு அமல்படுத்தப்படாததால், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி உத்தரவை நிறைவேற்றாததற்கு வருத்தம் தெரிவித்தனர்.
இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, அதிகாரிகளுக்கு எதிரான அவமதிப்பு நடவடிக்கைக்கு தடை விதித்ததுடன், ஆண்டுதோறும் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, திருப்பரங்குன்றம் மலையை இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய இடத்தில் தினமும் விளக்கேற்ற அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவுடன், அரசின் மேல்முறையீட்டு மனுவையும் இணைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை கோரிய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து அரசு ஏன் ஜூன் மாதத்தில்தான் மேல்முறையீடு செய்தது என்று கேள்வி எழுப்பியது.
மேலும், இந்திய தொல்லியல் துறை, தமிழ்நாடு வக்பு வாரியம் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் உள்ளிட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பவும், தடை கோரும் மனு மீதும் நோட்டீஸ் பிறப்பிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



