தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் எழும்பூர் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பல்வேறு அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.
கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ப.சிதம்பரம் “திமுகவின் விசுவாசி” என குற்றம் சாட்டிய அவர், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்ததற்கும் அவர் காரணம் என தெரிவித்தார். மேலும், ராகுல் காந்திக்கு நடிகர் விஜய் மீது தனிப்பட்ட விருப்பம் இருப்பதாக கூறிய அவர், சில மூத்த தலைவர்கள் தங்களின் சுயநலத்திற்காக காங்கிரஸை திமுகவுடன் இணைத்துவிட்டதாக விமர்சித்தார்.
காங்கிரஸ் கட்சியின் சுமார் 100 நிர்வாகிகள் தற்போது தவெக அலுவலகத்தில் காத்திருப்பதாகவும், விரைவில் அவர்கள் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைய உள்ளதாகவும் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
திமுக குறித்து பேசிய அவர், “சென்னைக் கோட்டை” என்ற நம்பிக்கையில் திமுக இருப்பதாகவும், ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தவெக பிரச்சாரத்தால் அவர்கள் பதற்றமடைந்துள்ளதாகவும் கூறினார். எழும்பூர் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ யார் என்பதை “கூகுளுக்கே தெரியாது” என கிண்டலாக குறிப்பிட்டார். மேலும், திமுக 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது தங்களின் பயத்தை காட்டுவதாகவும், தற்போதைய நிலவரப்படி தவெகவுக்கு திமுகவை விட 2% அதிக வாக்குகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி டெல்லி செல்வதை விமர்சித்த அவர், மக்கள் அவரை மறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
கூட்டணி அரசியல் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார். புதுச்சேரியில் காங்கிரஸை தோற்கடிக்க திமுக மற்றும் பாஜக இணைந்து செயல்படுகின்றன என குற்றம் சாட்டினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் எழும்பூர் தொகுதிக்கான வேட்பாளராக ராஜ்மோகன் அறிவிக்கப்பட்டார். மேலும், செங்கோட்டையன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.



