தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி (த.வா.க) அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கூட்டணி முறிவுக்கான பின்னணி:
கடந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுகவுடன் இணைந்து த.வா.க பயணித்து வந்தது. இந்நிலையில், வரவிருக்கும் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை த.வா.க கோரியிருந்தது. ஆனால், திமுக தரப்பில் ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முன்வந்ததாகத் தெரிகிறது. இது அக்கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “நாங்கள் தொகுதிகளை மட்டும் கோரவில்லை; மக்களுக்கான 10 அம்ச கோரிக்கைகளையும் முன்வைத்தோம். ஆனால், திமுக அரசு அதனைப் பொருட்படுத்தவில்லை. மக்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளை அலட்சியப்படுத்தும் போக்கை ஏற்க முடியாது” என்று குறிப்பிட்டார்.
’பெரியண்ணன்’ தோரணைக்கு கண்டனம்:
மேலும் அவர் பேசுகையில், “திமுக தற்போது ‘பெரியண்ணன்’ பாணியில் செயல்பட்டு வருகிறது. மற்ற தோழமைக் கட்சிகளை மதிக்கும் மனப்பக்குவம் அவர்களிடம் இல்லை. இத்தகைய மேட்டிமைத்தனமான தொணியை எங்களால் ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, திமுக கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளோம்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
வேல்முருகனின் இந்த அதிரடி முடிவு, திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழக அரசியலில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



