திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெற்றி மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு முன்னேற்ற சங்கத்தின் 2-ம் ஆண்டு துவக்க விழா நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு திமுக மாற்றுத்திறனாளிகள் அணியின் மாநில தலைவர் ரே.தங்கம் தலைமை தாங்கினார். கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் முன்னிலை வகித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட வெற்றி மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு முன்னேற்ற சங்கத் தலைவர் சி.முருகன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக திமுகமாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றி பேசியதாவது:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி என்றும், “உடல் ஊனமுற்றவர்கள்” என்பதற்கு பதிலாக “மாற்றுத்திறனாளிகள்” என்ற மரியாதைமிக்க பெயரை வழங்கியவர் கலைஞர் என்றும் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சியில் 23 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 கோடி மதிப்பீட்டில் சிறப்பு அரசாணைகள் வெளியிடப்பட்டு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், மூன்று சக்கர வாகனம், கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர் பதவி, பேட்டரி வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ராஜேஸ்வரி, திமுக ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார். வழக்கறிஞர் சுப்ரமணியன், மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மனோகரன். சங்க பொருளாளர் பிரவீன்ராஜா, உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக மாற்றுத்திறனாளிகள் சங்க உறுப்பினர் அரவிந்த் நன்றி கூறினார்.



