இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவர் பதவிக்கு டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் மிதுன் மன்ஹஸ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மும்பை – வான்கடே மைதானத்தில் உள்ள பி.சி.சி.ஐ-யின் தலைமை அலுவலகத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளதை பி.சி.சி.ஐ செயலாளர் தேவஜித் சைகியா உறுதி செய்துள்ளார். ‘மிதுன் எனது முன்னிலையில் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளார்’ என்றார். தற்போது பி.சி.சி.ஐ.யின் இடைக்கால தலைவர்க ராஜீவ் ஷுக்லா செயல்பட்டு வருகிறார்.
பி.சி.சி.ஐ தலைவராக பதவி வகித்து வந்த ரோஜர் பின்னி 70 வயதை எட்டியதை தொடர்ந்து, அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பி.சி.சி.ஐ சட்டவிதிகளின்படி 70 வயதை கடந்தவர்கள் பதவியில் தொடர முடியாது என்பதால் இந்த முடிவை ரோஜர் பின்னி மேற்கொண்டிருந்தார். வரும் 28-ம் தேதி மும்பையில் பி.சி.சி.ஐ ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளது.
இந்த சூழலில்தான் அந்த பதவிக்கு மிதுன் விண்ணப்பித்துள்ளார். அவர் ஒருவர் மட்டுமே இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார். பி.சி.சி.ஐ பொருளாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரகுராம் பாட் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



