அமெரிக்காவும் ஈரானும் அடுத்த வாரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
அமெரிக்காவும் ஈரானும் ஒரு மாத காலத்திற்கு தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த வரைவு தயாரிக்கும் பணியில் இரு தரப்பும் மத்தியஸ்தர்கள் மூலம் ஈடுபட்டு வருகின்றன.
இந்த ஒப்பந்தத்தில் ஈரானின் அணுசக்தி திட்டம், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றத்தை குறைப்பது, ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மற்றொரு நாட்டுக்கு மாற்றுவது உள்ளிட்ட அம்சங்களை அமெரிக்கா முன்வைத்துள்ளது.
அதேவேளை, அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்பதையும் சேர்த்து பல கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தை முன்னேற்றம் தாமதமாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், அமெரிக்காவின் வர்ஜீனியாவில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், “மோதலை முடிவுக்கு கொண்டு வரும் திட்டம் தொடர்பாக ஈரானிடம் இருந்து இன்று இரவு பதில் வரும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த செயல்முறையை ஈரான் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறதா என்பது இன்னும் தெளிவாகவில்லை. விரைவில் தெரிந்துவிடும்” என்றார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையில், “ஈரான் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு பிளவுகளுடன் செயலிழந்த நிலையில் உள்ளது. அது பேச்சுவார்த்தைக்கு தடையாக இருக்கலாம். இருப்பினும், ஈரானின் பதில் தீவிரமான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. அதற்கு ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து பாகிஸ்தான் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சியின் காரணமாக ஏப்ரல் 8-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 11-ம் தேதி இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.
பின்னர் போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தேதி குறிப்பிடாமல் நீட்டித்தார். அதேநேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை தொடர்ந்து முற்றுகையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



