தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால், த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் ஆர்.என். ரவி அர்லேகர் இதுவரை அழைக்கவில்லை.
த.வெ.க.வுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் முன்வந்திருந்தாலும், பெரும்பான்மைக்கு இன்னும் தேவையான எண்ணிக்கை இல்லாததால் அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது.
இதையடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான ஆதரவை திரட்டும் பணியில் த.வெ.க. தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு கோரி அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய் தலைமையிலான த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தன. ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தி.மு.க. கூட்டணியிலேயே தொடரும் என்றும் த.வெ.க.வுக்கு ஆதரவு வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 2 உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படுவதால், தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க.வின் நிலைப்பாடு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. த.வெ.க. தரப்பில் இருந்து திருமாவளவனிடம் ஆதரவு கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
வி.சி.க.வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இன்று காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாததால் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த சூழலில், த.வெ.க. தலைவர் விஜய் தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து பட்டினப்பாக்கம் சென்றுள்ளார். அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தமிழக பொறுப்பு கவர்னரான அர்லேகர் இன்று மாலை கேரளா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநில கவர்னராகவும் பொறுப்பு வகித்து வரும் அவர், அங்கு சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய ஆட்சி அமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் 16-வது சட்டமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், வருகிற 10-ந்தேதிக்குள் புதிய அரசு அமைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் அரசு அமைக்கப்படாத பட்சத்தில், மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்படும் சூழலும் உருவாகலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், இன்று மாலைக்குள் விஜய் கவர்னரை சந்தித்து பெரும்பான்மை ஆதரவை நிரூபிப்பாரா என்பது தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அரங்கேறும் அரசியல் திருப்பங்கள் தமிழக அரசியல் களத்தை பரபரப்பின் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளன.



