தமிழை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படும் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், தனது பேச்சுக்கு சட்டப்பேரவையிலேயே மனம் வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை வாசித்தபோது நிதியமைச்சர் மரிய வில்சன் தமிழ் உச்சரிப்பில் தடுமாறியதையும், எண்களை தவறாகக் குறிப்பிட்டதையும் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு அமைச்சர் அளித்த பதிலும், வெளிப்படுத்திய உடல்மொழியும் ஆணவத்தின் உச்சமாக இருந்தது.
தன்னிடம் உள்ள தவறை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள முனைவதே அரசியல் முதிர்ச்சியாகும். ஆனால், தனது தவறை ஏற்றுக்கொள்ளாமல் அதிகாரத் திமிருடன் அமைச்சர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.
தமிழ்ச் சான்றோர்கள் பலர் செந்தமிழில் கருத்துகளை வெளிப்படுத்திய சட்டப்பேரவையில், அமைச்சர் ஒருவர் பார்த்து வாசிக்கும்போதுகூட தமிழில் தடுமாறுவது அந்த அவைக்கு இழுக்காகாதா? தனது தவறை சுட்டிக்காட்டியபோது அமைச்சர் கோபப்படுவது ஏன்?
‘சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பதற்கேற்ப தமிழை பிழையின்றி பேச பயிற்சியும் முயற்சியும் மேற்கொண்டால் எளிதில் கற்றுக்கொள்ள முடியும்.
தான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்றும், அந்த மதம் தனக்கு அன்பை போதித்தது என்றும் அமைச்சர் கூறியிருப்பதாக தெரிகிறது. அவர் சார்ந்த மதம் அன்பை போதிக்கிறது என்று கூறுவது அவரது உரிமை. ஆனால், தமிழ் அன்பை போதிக்காது என்று கூறுவதற்கு அவருக்கு என்ன உரிமை உள்ளது?
‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’, ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என அன்பின் பெருமையை உலகுக்கு எடுத்துரைத்தது தமிழ் இலக்கியம். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ உள்ளிட்ட உயரிய கருத்துகள் தமிழின் வழியாகவே உலகுக்கு எடுத்துரைக்கப்பட்டன.
இயேசு கிறிஸ்து, நபிகள் நாயகம், சைவ திருமுறைகள், பாரதி உள்ளிட்ட பல்வேறு சமயங்களும் சான்றோர்களும் அன்பை வலியுறுத்தியுள்ளனர். எனவே, அனைத்து சமயங்களும் அன்பை போதிக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
வள்ளலார், வைகுந்தர் உள்ளிட்டோர் அன்பையும் மனிதநேயத்தையும் வலியுறுத்தி வாழ்ந்த தமிழ் மண்ணில், தமிழ் மொழி அன்பை போதிக்கவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது.
உலகுக்கு மானுடத்தையும், கருணையையும் போதித்த பேரன்பின் தாய் தமிழ். எனவே, தமிழை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் மரிய வில்சன், தனது பேச்சுக்கு அதே சட்டப்பேரவையில் மனம் வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். தனது தவறை திருத்திக் கொள்வதை விடுத்து கோபப்படாமல், தமிழின் பெருமையையும் பேரன்பையும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



