கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு வீட்டில் இருந்தபடியே இணையவழியில் நுழைவுச்சீட்டு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானல் 12 மைல் சுற்றுச்சாலையில் உள்ள குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. கடந்த ஆண்டு வரை இந்த இடங்களுக்கு தனித்தனியாக கட்டணம் செலுத்தி நுழைவுச்சீட்டு பெறும் நடைமுறை இருந்தது.
இந்நிலையில், கடந்த ஜனவரி 11-ம் தேதி முதல் இந்த நடைமுறை மாற்றப்பட்டு, வனத்துறையின் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, மொபைல் செயலிகள் உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் சுற்றுலா இடங்கள் மற்றும் வாகனங்களுக்கான கட்டணத்தை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு நுழைவுப் பகுதியான பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் கியூஆர் குறியீடு மூலம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி, நட்சத்திர ஏரி, பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், அப்பர் லேக் வியூ ஆகிய 5 இடங்களில் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கான நுழைவுச்சீட்டு வழங்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இதனால் பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்காமல் நுழைவுச்சீட்டை காண்பித்து சுற்றுலா இடங்களுக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், நுழைவுச்சீட்டு பெறுவதை மேலும் எளிதாக்கும் வகையில், வீட்டில் இருந்தபடியே இணையவழியில் நுழைவுச்சீட்டு பெறும் வசதியை கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, https://kodaikanalwildlifesanctuary.com/ticket/book என்ற இணையதளத்தில் சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்து, பெயர், பயண தேதி, பெரியவர்கள் மற்றும் சிறுவர்களின் எண்ணிக்கை, இந்தியர் அல்லது வெளிநாட்டினர், பயன்படுத்தும் வாகனம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
பின்னர், சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுக் கட்டணம், வாகனக் கட்டணம் மற்றும் கேமராவுக்கான கட்டணம் ஆகியவற்றை இணையவழியில் செலுத்தி நுழைவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச்சீட்டை கொடைக்கானல் வரும் நாளில் பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் வனத்துறை பணியாளர்களிடம் காண்பித்து, சுற்றுலா இடங்களுக்குச் செல்லலாம்.
இந்த நுழைவுச்சீட்டு 24 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும். எனவே, சுற்றுலாப் பயணிகள் வனத்துறை சுற்றுலா இடங்களுக்குச் செல்ல விரும்பும் தேதியை முன்கூட்டியே தேர்வு செய்து, அதற்கான கட்டணத்தை இணையவழியில் செலுத்தி நுழைவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



