குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் போலீசார் மேற்கொண்ட சிறப்பு அதிரடி நடவடிக்கையில், சட்டம்–ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக 1,577 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் தடுக்க போலீசார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் வகையில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தீவிரப்படுத்தியுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் கடந்த மாதம் 29-ம் தேதி முதல் கடந்த 11-ம் தேதி வரை சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என மொத்தம் 52,279 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 1,577 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இதே காலகட்டத்தில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணைகளை நிறைவேற்றவும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என 3,288 பேர் மீதான பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணைகளை நிறைவேற்றுவதற்கும், தலைமறைவாக உள்ள ரவுடிகளை கைது செய்வதற்கும் போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகள் ரவுடிகள், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சமூக விரோதிகள் மீது தொடர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கமான சோதனைகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீவிர கண்காணிப்பு மூலம் குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுத்து, மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், போலீசாரின் தொடர் நடவடிக்கைகளால் ரவுடிகள் மீதான கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பிடியாணைகளை நிறைவேற்றும் நடவடிக்கையும் அதிகரித்துள்ளது. சட்டம்–ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மீது இலக்கு வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.



