தமிழக சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு திமுக முழுமையான ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர், “தொகுதி மறுவரையறையில் எக்காரணம் கொண்டும் தமிழகம் பாதிக்கப்படக் கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை திமுக முழுமையாக ஆதரிக்கிறது” என்றார்.
மேலும், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு மீண்டும் கொண்டு வரக்கூடும் என்ற சூழல் நிலவுவதாகவும், இதன் பாதிப்பை இந்தியாவிலேயே முதன்முதலில் எடுத்துரைத்தவர் அன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சிக் காலத்திலேயே இதுதொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், 7 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியதாகவும், ஏப்ரல் 16-ஆம் தேதி மசோதா நகல் எரிப்புப் போராட்டம் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்ததாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், “நாடாளுமன்றத்தில் மசோதா தோற்கடிக்கப்பட காரணமாக திமுக செயல்பட்டது. தமிழகத்தின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய அனுமதிக்க மாட்டோம். 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், மக்களவையில் தமிழகத்தின் தற்போதைய 7.18 சதவீத பிரதிநிதித்துவம் குறையக் கூடாது. எனவே அரசு கொண்டு வந்துள்ள தனித் தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது” என்றார்.
விவாதத்தின் முடிவில், அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வரின் தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.



