தமிழகத்தில் மதுரை, வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை (ஜூலை 25) முதல் 28-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, குஜராத்திலிருந்து கர்நாடகா வரை சராசரி கடல் மட்டத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. மேலும், தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காணப்படுவதால், மாநிலத்தின் பல பகுதிகளில் மழைக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக, ஜூலை 25-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழக பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
ஜூலை 26-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். ஜூலை 27 முதல் 30-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நாளை முதல் 28-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என்றும், பிற மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பான அளவிலேயே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் பதிவாகக்கூடும்.
மேலும், இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. பந்தலூர் மற்றும் விண்ட்வொர்த் எஸ்டேட்டில் தலா 3 செ.மீ. மழையும், செருமுள்ளி, வூட் பிரையர் எஸ்டேட், தேவாலா, மேல் பவானி மற்றும் அவலாஞ்சி பகுதிகளில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



