காவிரி நீர் உரிமை தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் கர்நாடகா செல்லும் முயற்சியை கைவிட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக பல ஆண்டுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எந்தத் தீர்வையும் அளிக்காததால், சட்டப் போராட்டத்தின் மூலம் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற யோசனையை கடந்த காலங்களில் தி.மு.க. அரசு தொடர்ந்து நிராகரித்ததாகவும், கர்நாடக அரசு பேச்சில் ஒன்று, செயல்பாட்டில் ஒன்று என்ற நிலைப்பாட்டில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டு அணைத் திட்டம் தமிழ்நாட்டின் சட்டப்பூர்வமான காவிரி நீர் உரிமையை பாதிக்கும் முயற்சி என்றும், இதுகுறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்துவதால் பயன் இல்லை என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு என்றும் அவர் கூறியுள்ளார்.
கர்நாடக முதல்வர் அழைத்தபோதும், முதல்வராக இருந்த காலத்தில் மேகேதாட்டு குறித்து பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று தாம் மறுத்ததாகவும், அப்போதைய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனும் அதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாகவும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
கர்நாடக அரசு மேகேதாட்டு அணையை கட்டுவதில் உறுதியாக இருப்பதாக தொடர்ந்து கூறிவரும் நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்தப் பலனும் ஏற்படாது என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஏற்கனவே செயல்பட்டு வரும் நிலையில், பேச்சுவார்த்தைக்குச் செல்வது தமிழ்நாட்டின் 30 ஆண்டுகால சட்டப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமை தொடர்பான எந்த முக்கிய முடிவையும் எடுப்பதற்கு முன்பு, அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் கருத்துகளை தமிழக அரசு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இறுதியாக, காவிரி உரிமை தொடர்பாக கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியை தமிழக முதல்வர் கைவிட வேண்டும் என காவிரி டெல்டா விவசாயிகள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் கேட்டுக்கொள்வதாக தனது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



