ஆஸ்திரேலியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் இந்தியாவில் தனது முதல் வளாகத்தை சென்னை வேளச்சேரியில் நிறுவ உள்ளது. தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகமாக இது அமையவுள்ளது.
சென்னை நந்தனத்தில் உள்ள வழிகாட்டி நிறுவனத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் விஜய் முன்னிலையில் பல்வேறு உலகளாவிய நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
ரூ.125 கோடி முதலீட்டில் உருவாகவுள்ள மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக வளாகம் மூலம் 200-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1911-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், QS உலகப் பல்கலைக்கழக தரவரிசை 2026-இல் 77-வது இடத்தைப் பெற்றுள்ளது.
மேலும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சப் (Chubb) நிறுவனம் தமிழ்நாட்டில் தனது உலகளாவிய திறன் மையத்தை அமைக்கிறது. இதன் மூலம் 220 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஜெர்மனியைச் சேர்ந்த நார்டெக்ஸ் (Nordex) நிறுவனம் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைத்து 1,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க உள்ளது.
அதேபோல், தென் கொரியாவின் மோட்டிவ்லிங்க் (MotiveLink) நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.300 கோடி முதலீட்டில் வாகன உதிரிபாக உற்பத்தி நிலையம் அமைக்கவுள்ளது. இதன் மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மொத்தமாக ரூ.725 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டங்கள் மூலம் 2,920-க்கும் மேற்பட்டோருக்கு உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த முதலீடுகள் தமிழ்நாட்டை உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயர்கல்வி மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளின் முக்கிய மையமாக மாற்றும் என்றும், முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழக அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் முதல்வர் விஜய் உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.



