மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு அரசு தண்ணீர் திறக்காததால், காவிரி ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள சுமார் 1.85 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளை நம்பியே விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொண்டதாகவும், ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு சுமார் ரூ.25 ஆயிரம் வரை செலவழித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தண்ணீர் பற்றாக்குறையால் திருவாரூர் மாவட்டம் நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிர்கள் கருகி, விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எனவே, அரசு உடனடியாக வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளை டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி, பாதிக்கப்பட்ட வயல்களை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
மேலும், மீதமுள்ள நெற்பயிர்களை பாதுகாக்கும் வகையில், விவசாயத்திற்கு 24 மணி நேரமும் தடையின்றி இலவச மும்முனை மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.



