திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.
இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 4,000 மாணவர்கள், 64 பாடப்பிரிவுகளில் கல்வி பயின்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறும் 11-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களையும் பட்டங்களையும் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.
விழாவில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வரவுள்ள அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார். பின்னர் கார் மூலம் பல்கலைக்கழக வளாகத்திற்குச் சென்று ஓய்வெடுத்த பிறகு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
பட்டமளிப்பு விழாவிற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் பல்கலைக்கழக நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



