நெல் மற்றும் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு மாநில அரசின் ஊக்கத்தொகையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தி வழங்கப்படுவதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டு பேசிய அவர், விவசாயிகள் நெல் மற்றும் கரும்பு பயிரிடுதல் முதல் அறுவடை மற்றும் விற்பனை வரை கடுமையாக உழைத்து வருவதாக குறிப்பிட்டார். தற்போதைய மாநிலத்தின் நிதிநிலை சவாலானதாக இருந்தாலும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஊக்கத்தொகையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கவுள்ள நெல் கொள்முதல் பருவத்தை முன்னிட்டு, மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் மாநில அரசின் ஊக்கத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.289 கூடுதலாக வழங்கப்பட்டு மொத்தம் ரூ.2,750 வழங்கப்படும். பொதுரக நெல்லுக்கு ரூ.159 கூடுதலாக வழங்கப்பட்டு குவிண்டாலுக்கு ரூ.2,600 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநில அரசின் நெல்லுக்கான ஊக்கத்தொகை ஒரே ஆண்டில் ரூ.156-க்கும் அதிகமாக உயர்த்தப்படுவது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
கரும்பு விவசாயிகளுக்கு, மத்திய அரசு நிர்ணயித்துள்ள மெட்ரிக் டன் ஒன்றுக்கான ரூ.3,290.50 என்ற விலையுடன், தமிழக அரசின் சார்பில் ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன் மூலம் கரும்புக்கு மெட்ரிக் டன் ஒன்றுக்கு மொத்தம் ரூ.4,000 கிடைக்கும்.
கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.134-க்கும் அதிகமாக உயர்த்தப்படுவதும் தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.



