பொதுப்பணிகள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திருவண்ணாமலை மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் 2025 – 2026 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணர்கர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவுகளின் கீழ் கடந்த 2025 முதல் 06.09.2025 வரை நடத்தப்பட்டன.
நேற்றைய தினம் இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
பொதுப்பணிகள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் தலைமை ஏற்று சிறப்புரையாற்றியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீர்மிகு நல்லாட்சியில் தமிழ்நாடு துணைமுதலமைச்சர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பாக இளைஞர்களை விளையாட்டுத்துறையில் உலக அளவில் சாதனைமிக்கவர்களாக உறுவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. விளையாட்டு என்பது ஆரோக்கியத்தை மட்டுமல்ல சமத்துவத்தையும் பகுத்தறிவையும் வளர்க்கச்செய்யும் சிறந்த ஒன்றாகும். விளையாடினால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது அது உடலுக்கு. ஆனால் விளையாடும் போது அனைவரும் சமம் என்னும் பகுத்தறிவு மேம்படும், தொட்டால் தீட்டு என்று சொன்ன காலம். நாங்கள் படிக்கிற காலங்களில் தொட்டுத்தான் பார்க்க வேண்டும் என்று சொன்னது, கபடி விளையாட்டு, திருவண்ணாமலையில் மாவட்டத்தில் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் அதிகம் உள்ளார்கள். ஆகவே எங்கள் மாவட்டத்திற்கு ஒரு உள்விளையாட்டு அரங்கம் தேவை என்று நான் கேட்டுக் கொண்டதற்கினங்க முத்தமிழ்றிஞர் கலைஞர் 2006-2011 ஆட்சியில் நாம் அமர்ந்து இருக்கிற இந்த விளையாட்டு உள்ளரங்கம் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கல்வித்துறையோடு இணைந்திருந்த விளையாட்டு 1962 ல் தான் பிரித்து தனித்துறையாக உருவாக்கப்பட்டது.
தற்பொழுது திராவிட மாடல் ஆட்சியில் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் விளையாட்டை மேம்படுத்த முதலமைச்சர் கோப்பை போட்டிகளை உருவாக்கி மாநில அளவில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் தொகைகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாட்டு முதலமைச்சர், துணை முதலமைச்சர் அவர்கள் செஸ் ஒலிம்பியாட் உலகளாவிய விளையாட்டு நிகழ்ச்சியை தமிழ்நாட்டிலே இருக்கிற தலைநகரில் சிறப்பாக ஒருங்கிணைத்து 2022-23ம் நிதியாண்டில் 156 நாடுகள் பங்கேற்ற விளையாட்டு போட்டியை சிறப்பாக நடத்தினார்கள்.
மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 234 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படுமென அறிவுறுத்தி தற்போது வரை 40 மினி ஸ்டேடியங்கள் கட்டப்படுகின்றன. படிப்படியாக அனைத்து தொகுதிகளிலும் திறக்கப்பட உள்ளது. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு நிதி உதவி ஸ்பான்சர்ஷிப் அளிக்கப்படுகிறது. மேலும் 4,650 விளையாட்டு வீரர்களுக்கு 150 கோடி நிதி மதிப்பீட்டில் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
104 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆண்டுதோரும் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் வழங்க இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். அரசு வேலையில் 3 சதவீதம் விளையாட்டு வீரர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே தேசிய சர்வதேச விளையாடுகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கென அரசு பணியிலே காவல்துறை ,வங்கி பொதுப்பணித்துறை, என அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. சங்க கால இலக்கியங்களில் விளையாட்டின் ஆதாரமாக சதுரங்கம், ஜல்லிக்கட்டு, கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளன. குறிப்பாக இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், சாட்டைப் பந்தயம், குதிரைப் பந்தயம், விளையாட்டுகளை குறிப்பிடுகின்றன.
நம்முடைய திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்த அளவிற்கு 2025-2026 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் 96,530 பள்ளி மாணவ மாணவிகளும் 11,732 கல்லூரி மாணவ மாணவிகளும், 1,362 மாற்றுத்திறனாளிகளும், 4,634 அரசு ஊழியர்களும், 15,911 பொதுபிரிவினரும் என மொத்தம் 1 இலட்சத்து 31 ஆயிரம் நபர்கள் பதிவு செய்து விளையாட்டு போட்டிகளில் 32,620 நபர்கள் பங்கேற்றுள்ளனர் அதில் 2,118 வீரர் வீராங்கனைகள் வெற்றிபெற்றுள்ளனர். வெற்றிபெற்ற வீரர் வீராங்கனைகளுக்கும் பங்கேற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது பாரட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பல்வேறு பிரிவுகளின் கீழ் முதலிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.3000/பரிசுத்தொகையும், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.2000 பரிசுத்தொகையும், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.1000/- பரிசுத்தொகையும் அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிமுத்தழகன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சண்முகப்பிரியா, திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.



